Saturday, April 4, 2009

கருச்சிதைவு அபாயத்தைத் தடுக்க.............

இன்றைய பெண்கள் கருவுறும்போதே குழந்தையோடு சில கேள்விகளையும் சேர்த்தே சுமக்கிறார்கள். அவற்றுள் முக்கியமானது, ‘அபார்ஷன் அபாயம்குறித்த அவர்களின் சந்தேகங்கள். அவற்றைப் போக்கும் விதமாக இங்கே தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் அரசு மகப்பேறு மருத்துவரான திருமதி. சி.பரிமளா, ‘அபார்ஷன் என்பது நன்மை தீமை இரண்டும் சமவிகிதத்தில் சேர்ந்து செய்யப்பட்ட கலவைஎன்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

அபார்ஷன் என்றால் என்ன?
ஒரு பெண் தாயாகும் விஷயம் மிக அற்புதமானது. பலவித கனவுகளுடன் தனது கருவை, தாயானவள் நேசிக்கத் தொடங்குகிறாள். ஆனால் விதிவசத்தால் எல்லா பெண்களாலுமே குழந்தையைப் பெற்றெடுக்க முடிவதில்லை. சிலரால், சில காரணங்களால் கருவைச் சுமக்க முடியாமல் போகிறது. அந்தக் கருவானது குழந்தையாக முழு உருவத்தை அடையும் முன்பே, அதாவது 28 வாரங்களுக்குள் தானாகவோ அல்லது மருத்துவ முறையிலோ தாயை விட்டுப் பிரியும் நிகழ்வைத்தான்அபார்ஷன்என்கிறோம்.

அபார்ஷனை வகைப்படுத்த முடியுமா?
முடியும். அபார்ஷனை மருத்துவ முறையில் மூன்று விதமாக வகைப்படுத்தலாம். அவை...
1. தானாக ஆகும் அபார்ஷன் (Spontaneous)
2. எம்.டி.பி. (Medical Termination Pregnancy)
3. செப்டிக் அபார்ஷன்

தானாக ஆகும் Spontaneous அபார்ஷனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றாய் பார்ப்போம்...

பொய்த்தோற்ற அபார்ஷன் (Therater abortion):
உண்மையில் இது அபார்ஷன் இல்லை. ஆனால் அபார்ஷன் போன்று தோற்றமளிக்கும். திடீரென்று ரத்தப்போக்கு இருக்கும். ஆனால் அபார்ஷன் நடந்திருக்காது. காரணம், கருப்பை வாய் (Cervics) மூடி இருப்பதுதான். இதுபோன்ற சமயங்களில் மகப்பேறு மருத்துவரிடம் காட்டி, தேவையான ஓய்வு எடுக்க வேண்டும். பிறகு சரியாகிவிடும்.

தவிர்க்க இயலாத அபார்ஷன் (Inevitable Abortion):
இந்த வகையில் கருவானது திடீரென்று கருப்பையின் வாய் திறந்து வெளியேறலாம். ரத்தப்போக்கு இருக்கும். இத்தகைய சூழலில் கருவகத்தை முழுவதும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகுவது நல்லது.

அரைகுறை அபார்ஷன் (Incomplete Abortion) :
கருவானது முழுவதுமாக வெளிவராமல் அரைகுறையாக மட்டுமே வெளியேறும். மீதம் கருப்பையிலேயே தங்கிவிடும். இந்நிலையில் கரு முழுவதும் வந்துவிட்டதாக தவறாக நினைத்து அப்படியே விட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. மகப்பேறு மருத்துவரிடம் சென்று, கருவகத்தை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் முழுவதுமாக வெளிவராத கருவின் பிசிறுகள் தங்கி, இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு நிலைமை சிக்கலடையும்.

முழுமையான அபார்ஷன் (Complete Abortion):
இம்முறையில் கருவானது கருவகத்தை விட்டு முற்றிலுமாக வெளிவந்துவிடும். இப்படி முழுவதும் வந்தால், தனியாக மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படி முழுவதும் வெளிவந்துவிட்டதா என்பதை மகப்பேறு மருத்துவரிடம் சென்று சோதனை செய்து பார்த்துக்கொள்வது நல்லது.

அடிக்கடி ஏற்படும் அபார்ஷன் (Habitual Abortion):
இது பெரும்பாலும் கரு உருவான மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதத்துக்குள்தான் ஏற்படும். இதுபோன்று பெண்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1. கரு, கருப்பையில் சரியான முறையில் தங்காததால்.
2. கரு, சரியான வளர்ச்சி பெறாததால்.
3. கருப்பையின் வாய் திறந்திருந்தால்.

இதுபோன்று ஏற்பட சாத்தியக்கூறுகள் அதிகம்.

அடுத்து வி.ஜி.றி. எனப்படும் Medical Termination of Pregnancy பற்றிப் பார்ப்போமா?
ஒரு பெண்ணுக்கு மருத்துவ முறையில் அபார்ஷன் செய்வதைத்தான் வி.ஜி.றி. என்கிறோம். சில_பல காரணங்களால் தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்புகள் சரியாக வேலை செய்யாமல், சமயத்தில் சரிப்படுத்த முடியாத நிலையில் காணப்படும். இதுபோன்ற சூழலிலும், அம்மா சாப்பிட்ட மருந்துகளால் கருவான குழந்தைக்கு கிட்னி, மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்ட சூழலிலும், வி.ஜி.றி. சிபாரிசு செய்யப்படுகிறது. இன்னும் சில நேரங்களிலும் இந்த முறையில் அபார்ஷன் செய்யப்படுகிறது. அவை...

1. மரபணுக்கள் தொடர்பான நோயால் குழந்தை தாக்கப்பட்டிருக்கும்போது...
2. பிளசண்டாவில் ஏற்படும் பிரச்னைகளால்...
3. பனிக்குடத்தில் தண்ணீர் அதிகப்பட்டு விடும்போது...
4. ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கலான கருக்கள் வளரும்போது...
5. வைரல் இன்பெக்க்ஷன்களால் தாய் தாக்கப்படும்போது...
6. மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் தாய் பீடிக்கப்படும்போது...
7. மனஅழுத்த நோய்களால் தாய் அவதியுறும்போது...

செப்டிக் அபார்ஷன்
சுகாதாரமின்மையால் ஏற்படுவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். உதாரணமாக திருமணமாகும் முன்பே தவறான பழக்க வழக்கங்களால் கர்ப்பமாகிவிடும் சில பெண்கள், மருத்துவரிடம் செல்ல பயந்து சமயத்தில் எருக்கங்குச்சியை கருக்கலைக்க பயன்படுத்துவார்கள். இதுபோன்ற சுகாதாரமில்லாத கருப்பை சுத்தப்படுத்தும் செயல்களால் உண்டாவதுதான் இந்த செப்டிக் அபார்ஷன். இப்பழக்கம் கிராமங்களில மிக அதிகமாகக் காணப்படுகிறது. ஆனால் இது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகள் நிறைய.

1. கருக்குழாய் அடைப்பால் திருமணத்திற்குப் பின்பு குழந்தையில்லாமை,
2. கருப்பையில் ஓட்டை உண்டாகுதல்,
3. உதிரப்போக்கு ஏற்பட்டு இரத்தம் உறையாத தன்மை உண்டாகுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

அபார்ஷன் ஏற்பட பொதுவான காரணங்கள் என்னென்ன?
1. கருப்பையில் கரு சரியாக உருவாகாத பட்சத்தில் அபார்ஷன் தானாகவே ஏற்பட்டு விடும்.
2. கருப்பையின் பொசிஷன் சில பெண்களுக்கு ஏடாகூடமாக அமைந்திருப்பதால் அபார்ஷன் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
3. இரட்டைக் கருப்பை இருப்பதனாலும் அபார்ஷன் அவசியம்ஏற்பட்டு விடுகிறது.
4. கருப்பையில் ஃபைபிராய்டு கட்டிகள் தோன்றுவதால் அபார்ஷன் வலியுறுத்தப்படுகிறது.
5. தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது அபார்ஷன் கட்டாயமாகிறது.
6. சில குறிப்பிட்ட நோய்களுக்கு (கேன்சர், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட அபார்ஷனை அதிகப்படுத்துகின்றன.
7. மனநலக் கோளாறுகள் அபார்ஷனில் கொண்டுபோய் விட்டு விடுகின்றன.
8. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் அபார்ஷனை வலிந்து அழைக்கும் காரணிகள்.

அபார்ஷன் அபாயத்தைத் தவிர்ப்பது எப்படி?
1. கர்ப்பம் என்று உறுதியான உடனேயே கணவன்_மனைவி இருவரும் தாம்பத்ய உறவை நிறுத்திவிட வேண்டும். இதன் மூலம் கரு பாதிப்படையாமல் இருக்கும்.
2. அதிக களைப்பு தரக்கூடிய பணிகளைப் பார்க்காதிருத்தல் நல்லது. கூடவே நல்ல தூக்கமும், ஓய்வும் தேவை.
3. கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் கூடாது.
4. குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம்.
5. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
6. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
7. முதல் மூன்று மாதங்களில் அபார்ஷன் ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. வீணாக உடலை வருத்திக்கொள்ளக் கூடாது. குறிப்பாக, மன இறுக்கமின்றி காணப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு தாய்மார்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும், அபார்ஷனை முடிந்தவரை தடுத்து விடலாம். முன்னெச்சரிக்கை ஒன்றுதான் எப்போதும் நம்மை இன்னல்களிலிருந்து காப்பாற்றும். கர்ப்பகால மகளிருக்கும் அதுதான் முக்கிய தேவையாக இருக்கிறது

நன்றி : திவ்யா

பூப்பெய்தும் போது ஓய்வு தேவையா..?

கல்வி மட்டுமே பிரதானம் என எண்ணும் இக்காலத்தில், பருவமடைந்த பெண் குழந்தைகளை ஐந்து அல்லது ஆறு நாட்களிலேயே பள்ளிக்குப் புத்தகச் சுமையுடன் அனுப்பி விடுகிறோமே, இது எந்த அளவில் அவர்கள் உடல், மனநிலையைப் பாதிக்கும்?

அக்காலத்தில் 16 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என முதியோர்கள் கூறியது மருத்துவரீதியாக அவசியமற்றதா? இக் கேள்வியை வெவ்வேறு பிரிவுகளில் உள்ள மூன்று மருத்துவர்களின் முன் வைத்தோம். இதற்கு அவர்கள் அளித்த பதில்:

டாக்டர் கீதா அர்ஜுன்
(கைனகாலஜிஸ்ட், ஈ.வி. கல்யாணி நர்ஸிங் ஹோம்)

பெண்கள் பூப்பெய்தும் பொழுது அவர்களுக்குப் பதினாறு நாட்கள் ஓய்வென்பது
அவசியமேயில்லை. ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பொழுது அவர்களை வீட்டிலா உட்கார வைக்கிறோம்? இல்லையே, அதே போல்தான் இதுவும்!

பெண்களுக்கு இது அவர்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டம். இதற்காக அவர்களைத் தனிமைப்படுத்தவோ, ஓய்வு கொடுக்கவோ மருத்துவரீதியாகத் தேவையில்லை. இந்நிலை அவர்களுக்கு உடலளவில், மனதளவில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது. தேவைப்பட்டால் ரொம்ப ரத்தப் போக்கு, வயிற்றுவலி பிற இன்னல்கள் உள்ளவர்கள் அவர்களுக்கு தேவைப்படும் நாட்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி பூப்பெய்துவதென்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். பாலன்ஸ்ட் டயட் போதும். தனி உணவு முறைகள் எதற்கும் அவசியமில்லை."

டாக்டர் சுசீலா ஸ்ரீவத்ஸ்வா:
(மனநலமருத்துவர், அப்போலோ மருத்துவமனை)
அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் எத்தனையோ வித வேறுபாடுகள். உடல் ரீதியாக, மன ரீதியாக சமூக ரீதியாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

சமூக ரீதியாக அப்பொழுதெல்லாம் பெண்கள் பூப்பெய்தவுடன் பெரிய விழாவாக எடுத்து சுற்றம், நட்பு என்று அனைவருக்கும் அறிவித்தனர். காரணம் பெண்ணின் திருமணத்திற்கு இந்த பப்ளிசிட்டி ஒரு தேவையாக இருந்தது. இன்று அப்படியில்லை. பத்திரிகைகள், திருமணப் பதிவு மையங்களில் பெயரைப் பதிவு செய்து வரன் தேட முடிகிறது.

இரண்டாவது உடல் ரீதியாக தற்காலக் குழந்தைகள் மிகவும்
ஆரோக்கியமாக வளர்க்கப்படுகிறார்கள். காரணம் இக்கால பெற்றோர்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளோடு நிறுத்திவிடுகிறார்கள். அதுவும் பெற்றோர்கள் விஷயம் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். உடலில் ஏதாவது கோளாறு, பாதிப்பு என்றால் தகுந்த சிகிச்சைகள் உடனடியாக அக்குழந்தைகளுக்குக் கிடைத்து விடுகின்றன. அந்தக் காலத்தில் பத்தோடு பதினொன்றாக வளர்க்கப்பட்டதால், ஆரம்பத்திலிருந்தே போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படாததால் 'அந்த நேரத்தில்' மட்டும் 'தனியாக' கவனிக்கப் பட்டார்கள்.

இத்தகைய 'தனி கவனிப்பு' இக்காலக் குழந்தைகளுக்குத் தேவையில்லை. எனக்கு வயசுக்கு வந்த பொழுது தினமும் நல்லெண்ணெய் கொடுத்தார்கள். இப்பொழுது என் பெண்ணிற்கும் அதையே கடைப்பிடிக்க முடியாது. ஏனெனில் தற்கால உணவு முறைகளில் அவ்வாறு செய்வது உடலில் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். அதிகக் கொழுப்பு இருதயத்திற்கு அதிக பாதிப்பு.

மனரீதியாகப் பார்க்கும்பொழுது அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். பெண் வயசுக்கு வந்து விட்டால் தாவணி போட்டு விடுவார்கள். இப்ப அப்படிச் செய்ய முடியுமா? அதுவும் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் இத்தகைய பழக்க வழக்கங்கள் கேலிக்கும், கிண்டலுக்குமாகி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் தற்போது பள்ளிகளிலெல்லாம் ஒரே விதமான உடைகள் தான். இதனால் ஒரு பெண் வயசுக்கு வந்து விட்டால் அதை அவள் யாரிடமும் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை."

சுப்புலட்சுமி
(சித்தமருத்துவர், கர்ப்பரட்சாம்பிகை கருகாப்பு நிலையம்)

வயதுக்கு வந்த உடன் பெண்களை தனியாக உட்கார வைப்பது சரிதான். அப்படி உட்கார இப்போதைய சிறுமிகள் விரும்புவது இல்லை. ஆனால் இப்பழக்கம் சுகாதாரமானதாக இருப்பதோடு, அவர்கள் மனதிற்கும், உடலிற்கும் முழு ஓய்வு கொடுப்பதும் அவசியம்.

முதலில் பயந்து போய் இருக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுத்து, இது இயல்பாகவே எல்லாப் பெண்களுக்கும் வருவது தான் எனக் கூறி அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும். நம் ஊர்களில் வயதுக்கு வந்த உடன் பாலுடன் முட்டை கலந்து குடிக்கச் செய்வதும், நல்லெண்ணெயுடன் முட்டை கலந்து குடிக்கும் வழக்கமும் உள்ளது. இவை புரதச் சத்தும், கால்சியச் சத்தும் நிறைந்தவை. குளிக்கும் போது வயதுக்கு வந்த பெண்ணை நிறைய மஞ்சள் பூசிக் குளிக்கச் செய்வதும், தண்ணீரில் மாவிலை கலந்து குளிக்க வைக்கும் பழக்கமும் உண்டு. மஞ்சளும், மாவிலையும் மிகச் சிறந்த தொற்று நீக்கியாகச் செயல்படுகிறது. சில ஊர்களிலும், கிராமங்களிலும் கீரை விதை ஒரு தேக்கரண்டியுடன் பாலும் அருந்தும் பழக்கம் உள்ளது. கீரை விதை எலும்புகளுக்கு வன்மையை அளிக்கிறது.

கைக்குத்தல் அரிசியில் செய்த பிட்டு, பனைவெல்லாம் கலந்த மாவு உருண்டை தரும் வழக்கம் உண்டு. அரிசியில் இருக்கும் மாவுச் சத்தானது மற்ற தானியங்களில் உள்ள மாவுச் சத்தை விட வித்தியாசமானது. இந்த மாவுச் சத்தில் நூறு சதவீதம் அமினோ பெக்டின் என்ற சத்து இருக்கிறது. இது நாம் உண்ணும் உணவுகள் எளிமையாக செரிப்பதற்கு காரணமாக அமைகிறது. அரிசியில் எட்டு சதவிகிதம் புரதச் சத்து இருக்கிறது. இந்தப் புரதச் சத்தானது வளர்சிதை மாற்றத்தின் காரணமாக எளிதில் உடலை வளர்க்கும் சத்தாக மாறி நம் உடல் உள்ளுறுப்புகளை உறுதியாக்குகிறது. கைக்குத்தல் அரிசியில் வைட்டமின் 'பி' உயிர்ச் சத்து உள்ளது. இது தோலுக்கும், இரத்த நாளங்களுக்கும், ஊட்டத்தையும், உறுதியையும் அளிக்கிறது.

இரத்தப் போக்கு அதிகமாக இருந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் அதனை நிவர்த்தி செய்ய பனைவெல்லம் (இரும்புச் சத்து நிறைந்தது) கலந்த மாவு உருண்டை வழங்கப்படுகிறது.

உறவினர்கள் அனைவரும் வந்து குழந்தைகளை ஆசீர்வாதம் செய்வதுடன் வகை வகையாகச் சத்து நிறைந்த உணவுகளைப் 'பொங்கிப் போடும்' வழக்கமும் உண்டு. அதில் முக்கியமாக உளுந்தஞ்சோறு, உளுந்தங்களி, உளுந்தங்காடி முதலியவை செய்வார்கள். உளுந்து கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் இடுப்பு எலும்பிற்கு (pelvic bones) வன்மையைக் கொடுக்கும். புரதச் சத்து நிறைந்தவை.

தற்போது டீன் ஏஜ் பெண்கள் எங்கள் மருத்துவமனைக்கு வருவது
மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்றுவலி பிரச்சினைக்குத் தான். அவர்கள் வயதிற்கு வந்த உடன் பெற்றோர்கள் அவர்களுக்கு சத்தான உணவுப் பொருட்களைக் கொடுப்பதோடு, குறைந்தது ஒரு வாரமாவது முழு ஓய்வு கொடுத்து கவனித்துக் கொண்டால் மாதவிடாய்க் கோளாறுகள், முதுகு வலி முதலியவை வராது.

பெண்களின் வலியில்லாத பிரசவம்!

















மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ளும் வசதி அமெரிக்கா போன்ற மேலைநாடுகளைத் தொடர்ந்து இன்று நம் நாட்டிலும் சாத்யமாகி உள்ளது. எப்போது பரவலாகும் என்பதுதான் கேள்விக்குறி.

பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

1. குழந்தையின் எடை.

2. கருவறையில் குழந்தையின் நிலை.

3. இடுப்பு எலும்பின் தன்மைகள்.

4. சுருங்கும் தன்மையின் வலிமை.

5. முன் அனுபவம் மற்றும் எதிர்பார்ப்பு


என்ற ஐந்து காரணங்களின் அடிப்படையில் வலியின் அளவு மாறுபடும். எவ்வளவு வலி இருக்கும் என்பதை முன்பே அறிந்து கூறமுடியாது. சிலர் பொறுத்துக் கொள்ளக்கூடிய அளவில் வலியை உணர்கிறார் கள். சிலர் தியானம், மூச்சுப் பயிற்சி, வென்னீர் குளியல், மசாஜ், நர்ஸ் கவனிப்பு, நிற்பது, நடப்பது, அமர்வது போன்ற நிலைமாற்றம்.. என்று மருத்துவ முறை அல்லாத பழக்கங்கள் மூலம் வலியை குறைக்க முயல்கின்றனர். பலர், எந்த முறையையும் பின்பற்ற முடியாத அளவுக்கு வலியால் திணறுகிறார்கள்.

இப்படி சொல்லி விளங்க வைக்க முடியாத வலியை, மாயமாக மறைய வைத்து, குழந்தை பிறப்பதை அனுபவித்து மகிழ வைக்கும் ஒரு உபாயம்தான் 'எபிடியூரல் டெலிவரி' என்பது!

'எபிடியூரல் டெலிவரி' என்பது, தண்டுவடத்தில் ஊசி மூலம் ஒரு மருந்தை உட்செலுத்தி பிரசவ வலியை முற்றிலுமாக அகற்றி, குழந்தை பிறப்பை சுகமான அனுபவமாக மாற்றக்கூடிய ஒரு மருத்துவ முறையாகும்.

நன்கு பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணரால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதைப் பற்றி தெளிவாக விளக்கப்படும். ஒப்புதல் அளித்தால் மட்டுமே எபிடியூரல் கொடுக்கப்படுகிறது. 4 செ.மீ. இடைவெளியில் ஒழுங்கான பிரசவத்துக்குரிய அறிகுறிகள் தென்பட்டாலன்றி இது கொடுக்கப்படுவது இல்லை. வலியும் தொடங்கியிருக்க வேண்டும்.

எபிடியூரல் கொடுக்கும்போது, பக்க விளைவாக ரத்த அழுத்தம் குறையும் வாய்ப்பு உள்ளதால், ரத்தக்குழாய் வழியாக திரவங்கள் செலுத்தப்படும். 5 நிமிடத்துக்கு ஒருமுறை டாக்டரின் நேரடி கண்காணிப்பு அவசியமாகிறது. குழந்தையின் இதயத் துடிப் பும் மானிட்டரில் கண்காணிக்கப்படும்.

ஒருக்களித்து படுத்தவாக்கில் அல்லது படுக்கை நுனியில் குனிந்து உட்கார்ந்த வாக்கில் தண்டுவடத்தின் மத்தியில் எபிடியூரல் பொருத்தப்படும். முதுகை ஆன்ட்டிசெப்டிக் திரவத்தால் சுத்தம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஊசியை குத்துவார் கள். ஊசி வழியே எபிடியூரல் கதீட்டர் என்கிற சன்னமான, மிருதுவான பிளாஸ்டிக் குழாய் நுழைக்கப்படும். ஊசியை எடுத்து விட்டு, அந்த குழாயை முதுகின் மேல் டேப் போட்டு ஒட்டி விடுவார்கள். இதன் பிறகு சோதனைக்காக மிகக்குறைந்த அளவு மருந்து கொடுக்கப்பட்டு, பக்க விளைவு ஏற்படுகிறதா என பார்க்கப்படும். பிறகு, தேவையான மருந்து கொடுத்து ஆசுவாசப்படுத்துவார்கள்.

எபிடியூரல் பொருத்தியபின், எழுந்து நடமாட முடியாது. கால்கள் கனம் தெரியாத அளவுக்கு மரத்துப் போகும். திரும்பி படுக்கலாம். செயற்கை முறையில் சிறுநீர் வெளியேற்ற வழி செய்யப்படும். எளிதான பிரசவத்துக்கு இது மேலும் துணை புரிகிறது. எபிடியூரல் வேலை செய்ய ஆரம்பித்த வுடன் ஒவ்வொரு முறை கருவறை சுருங்கி, விரிந்து, குழந்தை இறங்கி வருவதை உணரும்போது வலியே தெரியாது!

குழந்தை பிறந்தவுடன் எபிடியூரல் மருந்து கொடுப்பது நிறுத்தப்படும். மயக்க மருந்து நிபுணரால் கதீட்டர் அகற்றப்படும். ஓரிரு மணி நேரத்தில் மருந்தின் வீரியம் குறைந்து உடல் சகஜ நிலைக்கு திரும்பி விடுகிறது.

ஏதாவது அவசர நிலையால் சிசேரியன் செய்ய நேர்ந்தால், இதே முறையில் மயங்கவைக்கும்போது குழந்தையை எடுப்பதை எந்த வலியும் இல்லாமல், ஆனால் சுயநினைவுடன் உணர முடியும். இதற்கான மனப் பக்குவத்தை டாக்டர் அவருக்கு முன்பே ஏற்படுத்தி விடுகிறார்.

இருந்தாலும், எபிடியூரல் பற்றி மாறுபட்ட கருத்து கொண்ட அமெரிக்கப் பெண் களும் இருக்கிறார்கள். அவர்களின் சந்தேகங்கள் குறித்து மயக்க மருந்து நிபுணர் கேட்டர் பாலுடன் பேசினோம். இவர் இந்தியாவில் பிறந்து, மருத்துவம் பயின்று, 20 வருடமாக அமெரிக்காவில் பம்பரமாக சுழன்று பணிபுரிந்து வருகிறார்.

''இங்கே பெரும்பாலான பெண்கள் எபிடியூரல் டெலிவரியை வரவேற்கிறார்கள். முதல் பிரசவத்தில் எபிடியூரல் பற்றி உணர்ந்தவர்கள் இரண்டாவது பிரசவத்துக்கு இயற்கை முறை பற்றி யோசிப்பதுகூட இல்லை!‘‘

''எந்த சிகிச்சை முறையிலும் பக்க விளைவு கள் தவிர்க்க முடியாதது. இதில் 2% வரை யிலேயே தலைவலி, முதுகுவலி போன்ற விளைவுகள் உண்டாகிறது. இந்தியாவில் பின் விளைவுகளை மட்டும் கணக்கிலிட்டு சிகிச்சையையே ஒதுக்கி விடும் போக்கு அதிகம். எபிடியூரல் டெலிவரியை பொருத்த வரை நன்கு பயிற்சி பெற்ற டாக்டர், மயக்க மருந்து நிபுணர் ஆகியோரைக் கொண்டு செயல் படுத்தினால் கண்டிப்பாக முழு பயனையும் அடையலாம்.‘‘

தண்டுவடத்தில் ஊசி குத்துவதால் வலி அதிகமாக இருக்கும். ''பிரசவ வலியை ஒப்பிடும்போது, முதுகில் ஊசி குத்தும் வலி பெரிதல்ல. இதற்கு பயன்படுத்தக்கூடிய மார்பின், டெமரால் போன்ற மருந்துகள் எளிதாக கிடைக்கக் கூடியவை.‘‘

''பிரசவத்தின்போது கணவர் கண்டிப்பாக உடன் இருக்க வேண்டும் என்பதால், அதுவே தைரியமும் நம்பிக்கையும் அளிக்கிறது. எபிடியூரல் பற்றி தெளிவாக, பொறுமையாக எடுத்துக் கூறி, சிலருக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை சொல்லி முழு ஒப்புதல் பெற்ற பின்பே செய்கிறார்கள். விடியோ கேசட் மூலம் விளக்குவதால் நன்கு விளங்குகிறது. வலியே இல்லாமல் குழந்தை பெற்றுக் கொண்டது இனிய அனுபவம்தான்!''

இந்தியாவிலும் மருத்துவ சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் வேளையில் 'எபிடியூரல் அனெஸ்தீஸியா' மட்டும் ஏன் பரவலாகவில்லை என்று ஈரோடு மகப்பேறு மருத்துவர் சிறீமதி முருகேசன், மயக்க மருந்து நிபுணர் சித்ரா சௌந்தர் ராஜன் ஆகியோரிடம் கேட்டபோது...

டாக்டர் சிறீமதி: எபிடியூரல் அனெஸ்தீஸியா மூலம் வலி இல்லாத பிரசவம் என்பது, நம் நாட்டில் சமீபத்தில்தான் கண்டு கொள்ளப் பட்டுள்ளது. பரவலாக நடைமுறைப்படுத்த இயலாமைக்கு காரணம், பயிற்சி பெற்ற மயக்க மருந்து நிபுணர்கள் போதிய அளவு இல்லாத குறைதான். பிரசவ நேரம் முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஸ்டிரைல் செய்யப்பட்ட, படுசுத்தமான பிரசவ அறை, மானிட்டர், ஆபரேஷன் தியேட்டர் என்று அனைத்தும் முழுமையாக உள்ள ஒரு மருத்துவமனையில்தான் இதுபோன்ற முறைகள் சாத்யமாகும். இங்கே வலி எடுத்த பின்பு தான் எங்களிடம் வருகிறார்கள். அந்த நேரத்தில் இது தேவைப்படுவதில்லை.

டாக்டர் சித்ரா: கர்ப்பிணிகள் கடைசி நேரத்திலோ அல்லது காலங்கடந்த நிலையிலோ வரும்போது அவசரமாக தாயையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய முயற்சி மட்டுமே செய்ய முடிகிறது. தினம் 50 பிரசவ கேஸ் வருகிறது. முழுநேரப் பணியில் தகுதியான மயக்க மருந்து நிபுணர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் இருந்தால்தான் இந்த முறை இங்கே பரவலாக முடியும். அந்த அளவுக்கு வசதிகள் எல்லா ஆஸ்பத்திரிகளிலும் உடனே வந்துவிடாது.

மார்பகங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ரீன் ஏஜில் பிரா தேர்ந்தெடுக்கும்போதுகிச்சென்று இறுகப் பிடிக்கும் சைஸாக இருக்கக் கூடாது. மார்பகம் பெரிதாக வளரும் வயது என்பதால், பிராவின் அளவுக்கு அடங்காத பகுதி, பிதுங்கியது போன்ற நிரந்தர ஷேப்புக்கு உள்ளாகிவிடும். அந்தந்த வயதில் மாறும் மார்பக அளவுக்கு ஏற்ப, பிரா சைஸை மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும்.

கனமான மார்புள்ளவர்களுக்கு வெயிட்டில் மார்பகம் சீக்கிரமே தழைய வாய்ப்புள்ளது. சரியான பிரா போடாவிட்டால் இந்தத் தொல்லை இன்னும் அதிகம். இவர்கள் போடும் பிரா கனமான மார்பகங்களை கொஞ்சம் தூக்கித் தரும்படியும், சரியாகப் பொருந்தும்படி கொஞ்சம் டைட்டாகவும் இருக்க வேண்டும்.

கனமான மார்புள்ளவர்கள் இரவில் கண்டிப்பாக பிராவைக் கழட்டக் கூடாது. மற்றவர்கள், அதிக டைட் இல்லாத பிரா போட்டுக் கொள்ளலாம். கழட்டி விட்டும் படுக்கலாம்.

பெண்களின் உடல், கர்ப்பகாலத்தில், குழந்தைக்குப் பால் கொடுப்பதற்காக தயாராகும். அதனால் அந்த நேரத்தில் மார்பகம் அளவிலும், வடிவத்திலும் வழக்கத்தைவிட பெரிதாக மாறும். ஆகவே பிரா சைஸை மாற்றி, இறுகப் பிடிக்காதபடி போடுங்கள். முக்கியமாக நிப்பிளைச் சுற்றியுள்ள கறுப்பு நிறம் இன்னும் அதிகமாகும். ஆனால் அதற்காக பயப்படத் தேவையில்லை. இது நார்மல்தான்.

கர்ப்பத்தின்போது மார்பகம் சைஸில் பெரிதாவதால் அதில் கோடுகள் விழ வாய்ப்புண்டு. அதனால் கர்ப்ப காலத்தில் விட்டமின்க்ரீம் தடவிக் கொள்ளுங்கள். சிலருக்கு நிப்பிளின் முனை நீளமாக இருக்காது. இது பால் குடிக்கும்போது குழந்தைக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். அதனால் முன்னெச்சரிக்கையாக கர்ப்பத்தின் ஏழாம் மாதத்திலிருந்து குளிக்கும்போது மார்பு முனைகளை லேசாக இழுத்து விட வேண்டும். இதனால் பலன் இல்லையென்றால் டாக்டரிடம் காட்டுங்கள்.

பால் கொடுக்கும் முன்னும், கொடுத்த பிறகும் நிப்பிளைச் சுற்றி, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்த பஞ்சை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பால் குடிக்கும் குழந்தைக்கு இன்ஃபெக்சன் வருவது தடுக்கப்படும்.

மெனோபாஸ் வரும் நேரத்தில் மார்பகத்தின் அளவில் மாறுதல் ஏற்படும். மார்பகத்தில் உள்ள கொழுப்பு டிஷ்யூ, அக்குள் பகுதியில் போய் சேரும். இதனால் இந்த வயதுப் பெண்களுக்கு பிளவுஸ், கை பக்கத்தில் மட்டும் பிடிப்பாகிவிடும். இதைத்தடுக்க வெயிட்டைக் குறைக்க வேண்டும். டாக்டரிடம் காட்டி, அவர் சொல்லும் எக்சர்சைஸை விடாமல் செய்ய வேண்டும்.

மெனோபாஸ் தாண்டிய வயதில் சில பெண்களுக்கு மார்பகத்தின் அளவு குறைந்து ஃபிளாட்டாகவும் மாறி விடலாம். இந்த நிலைக்கு ஒன்றும் செய்ய முடியாது. இதற்குத் தகுந்த அளவு பிராவை கச்சிதமாக தேர்ந்தெடுத்து போட்டுக் கொள்ளுங்கள்.

மெனோபாஸ் முடிந்தபின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ அவசியம் மார்பகத்தை செல்ஃப் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்வதோடு டாக்டரிடம் மார்பகப் புற்று நோய்க்கானமேமோகிராம்டெஸ்டும் செய்து பாருங்கள்.

ஏதாவது சில காரணங்களால் மார்பகத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக கேர் எடுத்து ஆன்டிசெப்டிக் க்ரீம் பூசுங்கள். தேங்காய் எண்ணெய்கூட பூசலாம். காயத்தின் அளவு பெரிதாக இருந்தால் கட்டாயம் டாக்டரிடம் போக வேண்டும். ஏனென்றால் மார்பகம் மிகவும் சென்ஸிட்டிவான உறுப்பு. உடனடியாக இன்ஃபெக்சன் ஏற்பட்டுவிட வாய்ப்புண்டு.

சில பெண்களுக்கு மார்பகத்தில் அங்கங்கே முடிகூட இருக்கும். சிலருக்கு இது பரம்பரை காரணமாக இருக்கலாம். வயதுக்கு வந்த டீன் ஏஜ் பெண்களுக்கும், திருமணமாகி குழந்தை இல்லாத பெண்களுக்கும், மாதவிடாய் சுற்று சரிவர வராத பெண்களுக்கும், இப்படி அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு. இதற்கு டாக்டரிடம் காட்டி முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீரியட் நேரத்தில், பொதுவாக ஒரு வாரம் பத்து நாட்களுக்கு முன்னரே மார்பகத்தில் வலி வருவது சாதாரணமான ஒன்றுதான். ஹார்மோன் சுரப்பிகளின் மாறுதல்களால் இப்படி ஏற்படுகிறது. ஸோ, பயப்படத் தேவையில்லை.

குழந்தை பெற்றெடுத்த நிலையில் மட்டுமல்லாமல், சும்மாவே கூட சிலருக்கு நிப்பிளில் திரவக் கசிவு இருக்கும். பிராவிலும் நீர்க் கசிவின் அடையாளம் தெரியும். இதுபோல இருந்தால் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும். பின்னாளில் இது கேன்சருக்கு கூட வழி வகுக்கும்.

மார்பகமோ அதன் நுனிப்பகுதியோ வழக்கத்துக்கு மாறாக தங்கள் அமைப்பிலோ, நிறத்திலோ மாறுபட்டிருந்தாலோ, மினுமினுப்பு மற்றும் வீக்கமாக இருந்தாலோ, மார்பகத்தில் அசௌகரியமோ வலியோ ஏற்பட்டாலோ, நிப்பிளில் திரவக் கசிவு இருந்தாலோ, பெண்கள், தங்களது மார்பகத்தை தாங்களே டெஸ்ட் செய்து பாருங்கள்.

பொதுவாக பீரியட்ஸ் முடிந்தபிறகு இந்த டெஸ்ட் செய்து பார்ப்பது நல்லது. கண்ணாடியின் முன் நின்று கையைத் தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு உள்ளங்கையை மார்பகங்களின் மீது வைத்து வட்ட வடிவில் தடவுங்கள்.

கையில் உருண்டையாக ஏதாவது தட்டுப்பட்டால் பயந்துவிடாதீர்கள். அது கேன்சர் கட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. இப்படித் தென்படும் உருண்டைகளில், பத்துக்கு ஒன்பது ஒருவேளை அவை ஆபத்தில்லாத டியூமராகவோ, அடைத்துக் கொண்டிருக்கும் தாய்ப்பால் கட்டியாகவோ அல்லது நீர்க்கட்டிகளாகவோ கூட இருக்கலாம். நீர்க்கட்டி எனில் சுலபமான அறுவைசிகிச்சை மூலமே எளிதில் நீக்கிவிடலாம். ஆனாலும் அவை ஆபத்தில்லாத கட்டியா என்று தெரிந்து கொள்ளமேமோகிராம்டெஸ்ட் செய்யவேண்டும்! கான்ஸருக்கான வீக்கம் எனில் சற்றே கடினமாக கையில் தென்படும். ஆனால், இந்த வீக்கங்களில் வலி இருக்காது. இப்படி ஏதாவது நீங்கள் டெஸ்ட் செய்யும்போது தென்பட்டால் எந்த வயதினராக இருந்தாலும் உடனடியாக டாக்டரிடம் போக வேண்டும்.

சிலருக்குத் திடீரென்று மார்பகம், அதிக கனமாகவும், வலியுடனும் மாறும். இதை இன்ஃபெக்சன் என்று கருதி சில டாக்டர்கள் ஆன்டிபயாட்டிக்குகளைத் தருகிறார்கள். ஆனால் கொழுப்புச் சத்து, பால் பொருள்கள் மற்றும் காபி, டீ போன்றவற்றை குறைத்தாலே சிலருக்கு இந்த வலி சரியாகலாம்!

மனித உடலின் ஜீன் றி53 ல் இருக்கும் தவறுகளால்கூட கேன்சர் வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதோடு புகைப்பிடிக்கும் பழக்கம், வைரஸ் இவைகள் மட்டுமல்லாமல் தவறான உணவுப் பழக்கங்கள் கூட கேன்சர் வர அதிக அளவு வாய்ப்பாகின்றன.

மார்பகத்தில் அறுவை சிகிச்சை என்றால் மார்பகம் முழுவதையும் நீக்குவது என்று அர்த்தமில்லை. இப்போதெல்லாம் லேசர் ட்ரீட்மெண்ட்டும், கீமோதெரபி சிகிச்சையும் மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டன. அப்படியே மார்பகம் முழுமையும் நீக்கப் பட்டாலும் கூட உங்கள் நார்மல் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. பொதுவாக கைகளின் அடிபாகத்தில்தான் அறுவை சிகிச்சைகள் நடக்கும். ஏனெனில் அங்குதான் கேன்சர் கட்டிகள் சுலபமாக பரவிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம்.

பெரிய மார்பகங்கள் இருப்பதுதான் மிகவும் பெருமை என்று உலகம் முழுவதிலும் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். இதனால், இதற்காக செயற்கை மார்பகம் பொருத்திக் கொள்வது அதிகமாகி வருகிறது. ஆனால் இப்படி செயற்கை முறையில் பெரிதாக்கப்படும் மார்பகங்களால் அழகு கூடினாலும், தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் உண்டு.

கான்சர் போலவே பயமுறுத்தக் கூடிய ஒரு விஷயம், ‘‘காஸ்டோகான்டிரிட்டிஸ்’’. மார்பகத்தில் கட்டிபோல தென்பட்டு வலி அதிகமாக இருக்கும். இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்து, ஸ்டீராய்ட் ஊசி போட்டாலே வலி சரியாகிவிடும்.
பெண்கள் © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute
This template is brought to you by : allblogtools.com Blogger Templates